ஆய்வுக்கூடத்தில் அல்ல, செடியில் முற்றிலும் மாறுகிறது நுண்ணுயிர் நடத்தை
மக்காச்சோள வேர் பாக்டீரியாக்கள், ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்படும்போதும் நேரடியாக செடியில் வளரும்போதும் முற்றிலும் மாறுபட்ட முறையில் செயல்படுவதாக நார்த் கரோலினா மாநிலப் பல்கலைக்கழக ஆய்வு கண்டறிந்துள்ளது.
மக்காச்சோள வேர்களில் உள்ள பாக்டீரியாக்கள், ஆய்வுக்கூடத் தட்டில் வளரும்போது ஒரு மாதிரியாகவும், உயிருள்ள செடியில் வளரும்போது முற்றிலும் வேறு மாதிரியாகவும் நடந்துகொள்கின்றன. வேரை அடைந்ததும் அவற்றின் ஆயிரக்கணக்கான புரதங்கள் மாறிவிடுகின்றன. இதை நார்த் கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தின் (North Carolina State University) புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இயற்கையில் நுண்ணுயிரிகள் உண்மையில் எப்படிச் செயல்படுகின்றன என்பதை ஆய்வுக்கூடச் சூழலால் மட்டும் காட்டிவிட முடியாது என்பதை இந்த ஆய்வு தெளிவாக்குகிறது. ஆய்வின் முடிவுகள் mSystems இதழில் வெளியாகியுள்ளன.
ஆராய்ச்சியாளர்கள் ஏழு மக்காச்சோள வேர் பாக்டீரியா வகைகளை ஆய்வுக்கூடத்திலும் நேரடியாக செடியிலும் வளர்த்து அவற்றின் நடத்தையை ஒப்பிட்டனர். ஒவ்வொரு பாக்டீரியமும் செடியில் இருக்கும்போது வேறு விதமாக நடந்துகொண்டது, ஆனாலும் அந்த மாற்றத்தின் தன்மை இனத்துக்கு இனம் மாறுபட்டது. சில வேரை அடைந்தவுடன் அதிக இயக்கத்திறன் பெற்று, நீந்தவும் நகரவும் உதவும் செயல்பாடுகளை இயக்கின; மற்றவை வேரில் ஒட்டிக்கொண்டு, பெரும்பாலும் அசையாமலேயே இருந்தன. செடியில் இருக்கும்போது இந்த பாக்டீரியாக்கள் பல்வேறு சுரப்பு அமைப்புகளை இயக்குதல், பாஸ்பேட்டைக் கரையச் செய்தல், வெவ்வேறு வகை சர்க்கரைகளை உட்கொள்ளுதல் உள்ளிட்ட பல நடத்தைகளைக் காட்டின.
"செடியில் வளரும் நுண்ணுயிரியை செடிக்கு வெளியே வளர்வதுடன் ஒப்பிடும்போது, இந்த நுண்ணுயிரிகள் தங்கள் இயக்க நிரலையே முழுமையாக மாற்றிக்கொண்டதுதான் மிகவும் பிரமிப்பூட்டும் விஷயம்" என நார்த் கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தில் தாவர மற்றும் நுண்ணுயிரியல் இணைப் பேராசிரியரும் இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான மானுவல் க்ளைனர் தெரிவித்தார். "இது வெறும் 10 மரபணுக்கள் அல்ல, செடியுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியவுடன் ஆயிரக்கணக்கான மரபணுக்கள் முற்றிலும் மாறுகின்றன" என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஏழு பாக்டீரியாக்களும், விஞ்ஞானிகள் 'வரையறுக்கப்பட்ட குழு' என அழைக்கும் ஒரு நுண்ணுயிர்த் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை. இவற்றின் மரபணுக்கள் முழுமையாக அறியப்பட்டவை; வேர்களில் நிலையாகக் குடியேறக்கூடியவை; மக்காச்சோள வேர்களில் இருந்தே வந்தவை என்பதும் உறுதி செய்யப்பட்டது. எனவே ஆய்வுக்கூடத்திலும் செடியிலும் சோதனை செய்ய இவை நம்பகமான உயிரிகளாக இருந்தன. இத்தகைய பல நுண்ணுயிரிகள் ஒரு செடியில் ஒன்றுடன் ஒன்று எப்படித் தொடர்பு கொள்கின்றன என்பதை மேலும் ஆராய்ந்தால், நிலையான வேளாண்மைக்கான தயாரிப்புகளை உருவாக்க அது உதவும். இதை ஆய்வின் முதல் ஆசிரியரும் நார்த் கரோலினா மாநிலப் பல்கலைக்கழக முனைவர் பட்ட மேலாய்வாளருமான அன்னா கேரல் தெரிவித்தார்.
