2,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்களைப் பாதுகாத்தது மனித ரத்தம்!
தென் சீனாவின் ஹுவாஷான் குகை ஓவியங்களில் உள்ள சிவப்பு வண்ணப்பொடியை, சுண்ணாம்புடன் கலந்த மனித ரத்தமே சுமார் 2,000 ஆண்டுகளாகப் பாறையுடன் ஒட்டவைத்திருக்கிறது என ஷான்டோங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வெப்பமண்டல வெப்பத்தையும் பருவமழையையும் நூற்றாண்டுகளாகத் தாங்கி வந்திருப்பதால், தென் சீனாவில் உள்ள 'சூவோஜியாங் ஹுவாஷான் குகை ஓவிய இயற்கை காட்சிப் பகுதி' தொல்லியலாளர்களை நீண்டகாலமாக வியப்பில் ஆழ்த்தி வருகிறது. ஷான்டோங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தலைமையிலான புதிய ஆய்வு, ஜர்னல் ஆஃப் ஆர்க்கியாலஜிக்கல் சயின்ஸ் இதழில் வெளியாகியுள்ளது; இதில் சிவப்பு வண்ணப்பொடியில் மனித ரத்தத்தின் கூறுகள் ஒரு ஒட்டுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டதைக் கண்டறிந்துள்ளனர். இதுவே தலைமுறை தலைமுறையாக அந்த ஓவியங்கள் புத்தம் புதிதாகத் தெரிவதற்குக் காரணமாக இருக்கலாம். ஸ்யோ ஆற்றை ஒட்டியுள்ள யுனெஸ்கோ பாதுகாப்புப் பட்டியலில் இடம்பெற்ற இந்தத் தளத்தில், சுண்ணாம்புப் பாறைகள் மீது ஆயிரக்கணக்கான பிரகாசமான சிவப்புநிற மனித, விலங்கு உருவங்கள் உள்ளன.
இந்த ஓவியங்கள், கிபி 100 வரை இன்றைய சீனா-வியட்நாம் எல்லைப் பகுதியில் வாழ்ந்த தாய்வழிச் சமூகமான லாக் வியட் (லுவோயு) இனத்தவரின் படைப்பு எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்; கதிரியக்க கார்பன் காலக்கணிப்பின்படி, மிகப் பழமையான ஓவியங்கள் சுமார் 2,400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். நூற்றாண்டுகள் கடந்தும் இந்த வண்ணப்பொடி பொடிந்துவிடும் சுண்ணாம்புப் பாறையுடன் ஒட்டி நின்றது எப்படி எனக் கண்டறிய, மூன்று தளங்களில் விழுந்திருந்த பாறைத் துண்டுகளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, வேதியியல் கூறுகளைக் கண்டறியும் நுட்பங்கள் மற்றும் புரதத் துண்டுகளை ஒன்றிணைத்து கரிமப் பொருட்களின் பட்டியலை உருவாக்கும் ஆய்வு முறை மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
சிவப்பு வண்ணப்பொடி, இரும்பு ஆக்சைடின் ஒரு வடிவமான ஹீமடைட் நிறைந்த களிமண்ணிலிருந்து வந்தது எனத் தெரியவந்தது. இதை பாறையுடன் ஒட்டவைக்க, சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு) மற்றும் ரத்தம் கலந்த ஒரு பசைப்பொருளை ஓவியர்கள் பயன்படுத்தினர். தேவைப்பட்ட ரத்தத்தின் அளவு மிகக் குறைவே எனவும், அது குறைந்தபட்சம் இரண்டு தாவர உண்ணி விலங்கு இனங்களின் ரத்தத்துடன் கலந்திருக்கக்கூடும் எனவும் ஆய்வு கண்டறிந்துள்ளது. பால் மற்றும் முட்டையிலிருந்து பெறப்பட்ட புரதங்கள் வரலாற்றில் வேறு இடங்களில் வண்ணப் பசைப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன; ஆஸ்திரேலியாவின் வடமாகாணத்தில் சுமார் 20,000 ஆண்டுகள் பழமையான பழங்கற்கால குகை ஓவியங்களிலும் மனித ரத்தம் முன்பே கண்டறியப்பட்டுள்ளது.
பெண்கள் தலைமையிலான அந்தச் சமூகத்தில் கருவுறுதலின் பொருத்தமான சின்னமாக, குழந்தை பிறப்பின்போது இந்த ரத்தம் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஓவியர்கள் ஏன் இத்தகைய உயரங்களில் ஏறி ஓவியங்களை வரைந்தார்கள் என்பதையோ, அந்த உருவங்கள் என்ன பொருள் தருகின்றன என்பதையோ இந்தக் கண்டுபிடிப்பு விளக்கவில்லை.
