நாசா வோயேஜர் 2 விண்கலத்தின் பணி நீடிக்க புதிய முறை கண்டுபிடிப்பு
நாசா பொறியாளர்கள் வோயேஜர் 2 விண்கலத்தின் மின்சாரத்தை பாதுகாத்து அதன் பணி இன்னும் ஒரு ஆண்டுக்கு நீடிக்க வழிவகுத்துள்ளனர்.
விண்வெளியில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பயணிக்கும் வோயேஜர் 2 விண்கலத்தின் செயல்பாட்டை நீடிக்க நாசா புதிய முறையை கண்டுபிடித்துள்ளது. நாசாவின் ஜெட் புரோப்பல்ஷன் ஆய்வகப் பொறியாளர்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தியுள்ளனர். இதன் மூலம் விண்கலத்தின் அறிவியல் பணி குறைந்தது இன்னும் ஓர் ஆண்டுக்குத் தொடரும்.
வோயேஜர் 2 மற்றும் அதன் இணை வோயேஜர் 1 இரண்டும், பிளூட்டோனியம் சிதைவால் உண்டாகும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் ரேடியோஐசோடோப் தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர்களை சார்ந்துள்ளன. எனினும், பிளூட்டோனியம் சிதைவதால் மின்சார உற்பத்தி ஆண்டுக்கு சுமார் 4 வாட் குறைகிறது, எனவே அவசியமற்ற அமைப்புகளை நிறுத்தி மின்சாரத்தை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
'பிக் பேங்' எனப் பெயரிடப்பட்ட இந்த முயற்சியில், சில சாதனங்கள் அணைக்கப்பட்டு, குறைவான மின்சாரத்தில் இயங்கும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மிக முக்கியம்; ஏனெனில் வோயேஜர் 2 விண்கலத்தின் அமைப்புகள் செயல்படத் தேவையான வெப்பம் இதனால் தக்கவைக்கப்படுகிறது. அதன் மூலம் மீதமுள்ள மூன்று அறிவியல் கருவிகளின் ஆயுட்காலமும் நீள்கிறது.
2024 முதல், குறைந்து வரும் மின்சார வழங்கல், ஒவ்வொரு வோயேஜர் விண்கலத்திலும் பத்து அறிவியல் கருவிகளில் இரண்டு கருவிகளை செயலிழக்கச் செய்துள்ளது. 'பிக் பேங்' முயற்சியின்றி, 2026 இறுதிக்குள் வோயேஜர் 2 இல் மேலும் ஒரு கருவி நிறுத்தப்பட்டிருக்கும். இந்தத் திட்டம் வெற்றி பெற்றதால், மீதமுள்ள கருவிகள் இன்னும் ஓர் ஆண்டுக்குத் தரவுகளைச் சேகரிக்க முடியும்.
வோயேஜர் 2-ஐ விட பூமியில் இருந்து இன்னும் தொலைவில் உள்ள வோயேஜர் 1 விண்கலத்திலும் இதே மின்சார சிக்கன முறையைப் பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. இதன் அறிவியல் பணி தொடர்வதை உறுதிசெய்ய, பொறியாளர்கள் இதை அடுத்த சில மாதங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
