காட்டுத் தீப் புகையும் மழையும் சேரும்போது சூழலுக்கு ஊட்டச்சத்து கிடைக்குமா?
காட்டுத் தீயின் புகையும் மழையும் ஒன்றிணையும்போது, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் அமெரிக்க சூழலமைப்புகளில் கணிசமாகப் படிகின்றன என புதிய ஆய்வு கூறுகிறது. ஆனால் இது எளிதான 'உரமாதல்' அல்ல என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
படிப்படியாக
- 1
தீயிலிருந்து துகள்களும் வாயுக்களும் வெளியாகின்றன.
- 2
புகை மழையுடன் கலக்கிறது.
- 3
மழை துகள்களைத் தரையில் கழுவுகிறது.
- 4
ஊட்டச்சத்துகள் உயிரினங்களுக்குப் பயன்படும் நிலைக்கு மாறுகின்றன.
காட்டுத் தீயில் இருந்து வெளியாகும் புகை பொதுவாக காற்று மாசுபடுத்தியாகவும், மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாகவும் அறியப்படுகிறது. ஆனால் புகையும் மழையும் ஒரே நேரத்தில் நிகழும்போது, எரிந்த நிலப்பரப்புகளிலிருந்து வெளியான ஊட்டச்சத்துகள் மீண்டும் பூமியில் விழுகின்றன என புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. உட்டா பல்கலைக்கழகம், உட்டா மாநிலப் பல்கலைக்கழகம் (USU), காரி சூழலியல் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வின்படி. புகை-மழை நிகழ்வுகள் உயிர்களுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துகளான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை கணிசமான அளவில் கொண்டு வருகின்றன. காட்டுத் தீ அதிகரிக்கும் அளவுக்கு, இந்த ஊட்டச்சத்து வெளியீடுகள் பெருகிய முக்கியத்துவம் பெறக்கூடும், ஆனால் இதுவரை பெரிதாகக் கவனிக்கப்படாத ஒரு விளைவாக இது இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முடிவுகள் என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.
ஆய்வாளர்கள் செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்ட புகைத் தரவையும், தேசிய வளிமண்டல படிவு திட்டம் வழங்கிய மழைநீர் வேதியியல் தரவையும் ஒன்றிணைத்து ஆய்வு செய்தனர். இந்த திட்டம் 1970களில் இருந்து மழைநீரின் வேதியியல் கூறுகளை கண்காணித்து வருகிறது. 2014, 2020, 2022 ஆகிய ஆண்டுகளில், 16 காலநிலைப் பகுதிகளில் உள்ள 250 இடங்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இந்தக் காலகட்டத்தில் புகை-மழை நாட்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது: 2014ல் ஆண்டுக்கு சராசரியாக நான்கு நாட்களாகவும், 2020ல் ஆறு நாட்களாகவும், 2022ல் சுமார் 22 நாட்களாகவும் இருந்தது. மூன்று ஆண்டுகளிலும் அப்பர் மிட்வெஸ்ட் பகுதி அதிக புகை-மழை நிகழ்வுகளைக் கொண்ட முதன்மை இடமாக இருந்தது.
காட்டுத் தீ தாவரங்களையும் பிற பொருட்களையும் எரிக்கும்போது, துகள்களும் வாயுக்களும் வளிமண்டலத்தில் கலக்கின்றன. அவற்றில் சில பின்னர் மழையுடன் கலக்கின்றன. மழை புகையின் வழியாகப் பொழியும்போது, அந்த துகள்களைத் தரையில் கழுவிக் கொண்டுவருகிறது. இதற்கு ஆங்கிலத்தில் 'வெட் டெபாசிஷன்' என்று பெயர். நீரில் கரையும் இந்த ஊட்டச்சத்துகள் உடனடியாகவே தாவரங்களும் பிற உயிரினங்களும் பயன்படுத்தும் வகையில் 'பயோஅவெய்லபிள்' நிலைக்கு மாறுகின்றன. இதை முதன்மை ஆய்வாளரும் உட்டா பல்கலைக்கழக நகர்ப்புற சூழலியல் நிபுணருமான அலெக்ஸாண்ட்ரா போனெட்-கோன்சாலஸ் தெரிவித்தார். 2022ம் ஆண்டு, அதிக புகை நிறைந்த ஆண்டாக இருந்த நிலையில், புகை-மழை நாட்கள் ஆண்டின் மொத்த நாட்களில் வெறும் 5% மட்டுமே இருந்தாலும். அந்த ஆண்டு மழை மூலம் படிந்த நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றில் சுமார் 20 முதல் 30 சதவீதத்தை அவை வழங்கின.
காட்டுத் தீப் புகை சூழலமைப்புகளுக்கு வளர்ச்சியை நிச்சயம் அதிகரிக்கும் வகையில் 'உரமாக' செயல்படுகிறது என்று இந்த முடிவுகள் காட்டவில்லை என ஆய்வாளர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இந்த ஊட்டச்சத்துகளின் தாக்கம், அவை விழும் சூழலமைப்பைப் பொறுத்தே அமையும்: ஏரிகளில் கூடுதல் ஊட்டச்சத்துகள் உற்பத்தியை அதிகரித்து, உயிரின அமைப்பையும் மாற்றக்கூடும். காடுகளில், முந்தைய ஆய்வுகளின்படி புகைப் படிவு மரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே சமயம், அவற்றின் உயிர்வாழ்வுக்கான வாய்ப்பைக் குறைக்கவும் கூடும்.
சொல் விளக்கம்
இதுவரை நடந்தது
- வட அட்லாண்டிக் கடல்நீர் வேதியியலை மீண்டும் மீண்டும் மாற்றிய ஐஸ்லாந்து பனிப்பாறை
- பிரிட்டனின் எரிந்த முல்லைப்புல்வெளிகள் வாரங்களில் பசுமையாகுமா?
- திபெத் பீடபூமியில் 1,32,867 பாறை பனிப்பாறைகளை பட்டியலிட்ட சீன விஞ்ஞானிகள்
- கடல் வெப்ப அலையும் அமிலமயமாதலும்: ஏன் ஒன்றாக தாக்குகின்றன?
- புயல் மழை ஏன் எதிர்பார்த்தபடி அதிகரிக்கவில்லை? வளிமண்டல வறட்சியே காரணம்
- செண்டினல்-1 கண்காணிப்பில் கிரீன்லாந்தின் பெட்டர்மேன் பனிப்பாறையிலிருந்து மான்ஹாட்டன் அளவு பனிமலை பிரிவு.
- காட்டுத் தீப் புகையும் மழையும் சேரும்போது சூழலுக்கு ஊட்டச்சத்து கிடைக்குமா?
