மக்கள் கலப்பு மிகுந்த இடங்களில் மொழிகள் ஏன் ஒத்துப்போகின்றன?
மக்கள் கலப்பு மிகுந்த இடங்களில் மொழிகள் ஒத்துப்போகின்றன; தனிமைப்பட்ட பகுதிகளில் மொழி அமைப்புகள் பன்முகமாகின்றன — மரபணுவுக்கும் மொழிக்கும் இடையிலான இந்த நேர்மாறு உறவை சூரிக் பல்கலைக்கழக ஆய்வு உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது.
நீண்ட காலமாக மரபணு ரீதியில் தனிமைப்பட்டிருக்கும் பகுதிகளில், மொழிகளின் அமைப்பு வியக்கத்தக்க அளவு வேறுபட்டிருக்கிறது; குடிபெயர்வும் மக்கள் கலப்பும் மிகுந்த பகுதிகளிலோ மொழிகள் ஒன்றையொன்று ஒத்திருக்கின்றன. இதை உலகளாவிய அளவில் உறுதிப்படுத்தியிருக்கிறது புதிய ஆய்வு ஒன்று. சூரிக் பல்கலைக்கழக மொழியியலாளர் அன்னா கிராஃப் தலைமையிலான இந்த ஆய்வு, 'புரொசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்' (PNAS) என்ற அறிவியல் இதழில் மே 1, 2026 அன்று வெளியானது. மனித மரபணுப் பன்முகத்தன்மைக்கும் மொழி அமைப்புப் பன்முகத்தன்மைக்கும் இடையே நேர்மாறான உறவு உலகம் முழுவதும் நிலவுவதை ஆய்வு கண்டறிந்துள்ளது.
முதலில் இது முரணாகத் தோன்றலாம். குடிபெயர்வும் கலப்பும் அதிகமுள்ள பகுதிகளில் மரபணு வேறுபாடுகள் அதிகம்; எனவே அங்கு மொழிகளும் அதிகம் வேறுபடும் என எதிர்பார்க்கலாம். ஆனால் நடப்பது நேர்எதிர். இந்த முடிவை எட்ட, பெரிய அளவிலான மரபணு மற்றும் மொழியியல் தரவுத்தொகுப்புகளை ஆய்வாளர்கள் இணைத்து ஆராய்ந்தனர்; ஒவ்வொரு பகுதியிலும் தனிநபர்களிடையேயான மரபணு வேறுபாடுகளை, அங்குள்ள மொழிகளின் அமைப்பு வேறுபாடுகளுடன் ஒப்பிட்டனர். புவியியல் அண்மை, மக்கள்தொகை அடர்த்தி, சுற்றுச்சூழல் நிலைமைகள், கண்டங்களில் மனிதர்கள் குடியேறிய காலம் உள்ளிட்ட ஆழமான மக்கள்தொகை வரலாறு — இவை அனைத்தையும் கணக்கில் எடுத்த பின்னரும் இந்த உறவு நிலைத்திருந்தது.
மக்கள் தொடர்பு மரபணுப் பன்முகத்தன்மையை அதிகரிக்கிறது; ஆனால் அதே தொடர்பு மொழிக் கூறுகளையும் பரப்பி, மொழிகளை ஒன்றுபோல் ஆக்குகிறது. தனிமையோ மரபணுப் பன்முகத்தன்மையைக் குறைக்கிறது; அதே நேரம் மொழிகள் சுதந்திரமாகப் பரிணமிக்க இடம் தருகிறது — இப்படி விளக்குகிறார் மூத்த ஆய்வாளரும் காலியாரி பல்கலைக்கழக மக்கள்தொகை மரபியல் நிபுணருமான கியாரா பார்பியேரி.
நியூ கினியா, இமயமலை போன்ற மரபணு ரீதியில் ஒப்பீட்டளவில் தனிமைப்பட்ட பகுதிகளில், மொழிகளின் அமைப்பில் அசாதாரண வளம் இருப்பதற்கு இந்தப் போக்கே காரணம். இத்தகைய பகுதிகள், இலக்கணம், ஒலி, பொருள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் பல்வேறு வழிகளைப் பாதுகாத்து வைத்திருக்கின்றன; நீண்ட தொடர்பு வரலாற்றால் மற்ற இடங்களில் இந்த வீச்சு சுருங்கிவிட்டது என்கிறார் சூரிக் பல்கலைக்கழக மொழிப் பரிணாமம் குறித்த பன்முகத் துறை ஆய்வு நிறுவன இயக்குநரும் மூத்த ஆய்வாளருமான பால்தாசர் பிக்கெல். மக்களைப் பிரித்து வைக்கும் அதே செயல்முறைகள்தான் மொழிகளையும் வெவ்வேறாக வளர அனுமதிக்கின்றன என்று கிராஃப் தொகுத்துக் கூறுகிறார்.
சொல் விளக்கம்
இதுவரை நடந்தது
- பூச்சிகளின் சமூக பரிணாமத்தில் மரபணுக்களின் பங்கு கேள்விக்குட்பட்டது
- கிழக்கு ஆசியா, சஹாராவுக்குத் தெற்கே இல்லாத மரபணு நோய்: புதிருக்கு விடை கண்ட ஆய்வு
- தாயின் வயது குழந்தையின் செல்களில் பதிவாகுவது எப்படி?
- பாலினம் இருமையும் அல்ல, எளிய வரிசைக்கோடும் அல்ல
- மக்கள் கலப்பு மிகுந்த இடங்களில் மொழிகள் ஏன் ஒத்துப்போகின்றன?
