நிலநடுக்கம் நின்றும் ஆடுவது போல் தோன்றுவது ஏன்? மூளையின் விளையாட்டு
இஸ்தான்புல் அருகே நடந்த நிலநடுக்கத்தை எதிர்கொண்ட 157 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், நடுக்கத்தின்போது வீட்டில் தனியாக இருந்தவர்களுக்கு, நாட்கணக்கில் நீடிக்கும் 'பேய் நிலநடுக்க' உணர்வு அதிகமாக இருந்தது எனத் தெரியவந்துள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வு நின்ற பிறகும், பலருக்கு தரை ஆடுவது போன்ற உணர்வு நீடிக்கும். உண்மையில் எந்த அதிர்வும் இல்லாதபோதும் தொடர்ந்து ஆடுவது போன்ற உணர்வைத் தரும் இந்த நிலைக்கு 'பேய் நிலநடுக்க உணர்வு' (PES) என்று பெயர். இதன் பின்னணியில் உள்ள நரம்பியல் காரணத்தை விளக்க துருக்கியின் இஸ்தான்புல் மெடிபோல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய ஆய்வொன்றை மேற்கொண்டனர். இந்த உணர்வு பின்-அதிர்வுகளிலிருந்து வேறுபட்டது; இது நாட்கள் அல்லது வாரக்கணக்கில் நீடிக்கலாம் எனவும், பெரும்பாலும் மனஉளைச்சல், அதீத எச்சரிக்கை உணர்வு, நடத்தை மாற்றங்களுடன் சேர்ந்து வரும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
செவிலியல் நிபுணர்களான கெரெம் எர்சின் மற்றும் ஷெய்மா துக்பா ஒஸ்டர்க் ஆகியோர், 2025 ஏப்ரல் 23 அன்று இஸ்தான்புல் அருகே மர்மரா கடலில் சிலிவ்ரி கடற்கரையை ஒட்டி ஏற்பட்ட 6.2 அளவுகோல் நிலநடுக்கத்தை எதிர்கொண்ட 157 பெரியவர்களைத் தேர்வு செய்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெரிய சேதம் ஏற்படவில்லை; இது இழப்பு, காயம் அல்லது உடைமை நாசம் போன்ற குழப்பும் காரணிகளைத் தவிர்க்க உதவியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நிலநடுக்கம் நடந்து நான்கு வாரங்களுக்குள், பங்கேற்பாளர்கள் அந்த நிகழ்வு குறித்தும், நிலநடுக்கம் தொடர்பான பதற்றம் மற்றும் மனஅதிர்ச்சி அறிகுறிகள் குறித்தும் நேர்காணல் செய்யப்பட்டனர்.
நிலநடுக்கத்தின்போது எங்கு இருந்தார்கள் என்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்தவர்களில் 48.7% பேர் நாளொன்றுக்கு பல முறை பேய் நிலநடுக்க உணர்வை உணர்ந்ததாகக் கூறினர்; வேலை இடத்தில் இருந்தவர்களில் இது 13.3% மட்டுமே. வீட்டில் இருந்தவர்களில் 41% பேருக்கு இந்த உணர்வு நாட்கணக்கில் நீடித்தது; வேலையில் இருந்தவர்களில் இது 6.7% மட்டுமே. வீட்டில் தனியாக இருந்தவர்களுக்கு பதற்றம், மனஅழுத்த மதிப்பெண்களும் கணிசமாக அதிகமாக இருந்தன. வீடு ஒரு மோசமான சூழல் என்பதால் அல்ல, மாறாக அங்கு அசையாமல் இருந்து உடல் உணர்வுகளை அதிகம் கவனிப்பதாலும், தரை உண்மையில் ஆடுகிறதா என்பதை மதிப்பிட உதவும் வெளிச் சூழல் குறைவாக இருப்பதாலும் இது நிகழக்கூடும் என ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
நிலநடுக்கத்தை 'லேசானது' என மதிப்பிட்டவர்கள் கூட, வீட்டில் இருந்திருந்தால், தொடர்ந்த பேய் உணர்வையும் அதிக பதற்றத்தையும் அனுபவித்தனர். லேசான ஓர் உணர்வு நிலநடுக்கமா, கட்டிட சிக்கலா அல்லது பின்-அதிர்வா என்ற தெளிவின்மை, தெளிவான கடுமையான நிகழ்வை விட அதிக பதற்றத்தை உருவாக்கும் 'அறிதிறன் அச்சுறுத்தல் தெளிவின்மையை' உருவாக்குகிறது எனவும், இது தன் சூழலையும் உடல் உணர்வுகளையும் மீண்டும் மீண்டும் மதிப்பிடும் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனவும் ஆய்வாளர்கள் எழுதுகின்றனர்.
